
துவரை போட்ட காடு

துவந்த யுத்தம் பாரு.
துரியன் யாரு? பீமன் யாரு?
டவுசர் கலரைப் பாரு
நன்மை எது? தீமை எது?
இன்னும் தகராறு!

எப்பவுமே வெளையாட்டு
எங்கயுமே சந்தோசம்
அப்பப்போ அடிச்சுக்குவோம்
மொறச்சுக்குவோம் சிரிச்சுக்குவோம்
கும்தலக்கடி கும்மாவா
சுள்ளாய்ங்கன்னா சும்மாவா!

கூரையெல்லாம் போச்சு
காரை உதிந்தாச்சு
பூனையோட நாங்களும்தான்
ஜோடி சேரலாச்சு
தாத்தாவோட மச்சு வீட்டில்
கதவு மிச்சமாச்சு!

கருவேல மரத்திலதான் ஏறியாடுவோம்
காக்காக்குஞ்சு வெளையாட்டு தூரியாடுவோம்
மத்த மரம் எல்லாத்தையும் வெட்டிப் போட்டீங்க
ஒத்த மரமாச்சும் வேணும் மிச்சம் வைய்யிங்க!

வடை சுட்ட கெழவியைத் தேடிப் போறோம்
வைக்கப்போரு வழியா ஏறிப் போறோம்
கேணத்தனமுன்னு கேலி பேசுவீங்க
கவிதையின்னு சொன்னாக் கையைத் தட்டுவீங்க!

அப்பத்தா குலுமையில அடைகாத்த கோழி இது
ஊரைச் சுத்த எங்களோட சோடி போடும் தோழி இது
கூடவே வெளையாடும், கூப்பிட்டா ஓடி வரும்
'செவலை’னு பேர் இதுக்கு - 'சிக்கன்’னு சொல்லாதீங்க!

செவனாண்டி வளத்துவரும்
சீவன் இந்த ரெண்டு பேரும்
வெள்ளாட்டுக் குட்டியது
வீரப்பனார் நேர்த்திக்கடன்!
புள்ளையிவன் என்ன ஆவான்
வீரப்பனார் விட்ட வழி!

வீரபாண்டி மாரியம்மா
வேணும் வரம் தாடியம்மா
பொட்டப்புள்ள சாஃப்ட்டுவேரு!
குட்டப் பய எஞ்சினியரு!
ஆடி வர்றோம் சேத்தாண்டி
ஆத்தா வரம் நிறைவேத்து!

கரகர வண்டி
காமாச்சி வண்டி
கிறுகிறு வண்டி
தலை சுத்துதாண்டி
அப்பா வர்றார்
டாஸ்மாக்கு தாண்டி
அடியே வாடி
ஒளிஞ்சுக்கலாண்டி!

குட்டிப் பொண்ணு எனக்கு
கோலம் போடத் தெரியாதே
தம்பிப் பாப்பாக்கு
தவக்கக்கூட தெரியாதே
மேலருந்து பாக்கிறியாம்மா
கீழறங்கி வந்துரும்மோய்!

பாஸ்கர் சக்தி
படங்கள்: சசிகுமார்
No comments:
Post a Comment